Tuesday, September 28, 2021

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

 


கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும்.

தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது. 

கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன். 

அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல் அல்லாவா? 

Monday, September 27, 2021

சாவி - ஒவ்வொரு குரங்கும், பூமியில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் (ஜெயமோகனின் சிறுகதை)

 


நட்டைத் திருகி இந்த மனித வாழ்க்கைக்குள் மாட்டிக்கொள்கிறது குரங்கு. அப்படி அதை இவ்வாழ்க்கைக்குள் கொண்டுவருவது சரியா தவறா என்பதுதான் இக்கதையின் மைய்யக் கேள்வி. கதையின் நாயகனுக்கு அது சரியெனத் தோன்றுகிறது ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றவில்லை. 

கதையில் ஒரு வித தத்துவத்தை பாமரத்தனமாக பேசும் ஒரு கதைமாந்தர் வந்து, நேரடியாக கதையில் மாந்தரிடம் விவாதிக்கிறது. அவனிடம் அதற்க்கு பதிலில்லாத போது திட்ட ஆரம்பிக்கிறான். 

கதை பகடியாகச் சென்றாலும், புராணங்கள் பற்றிய குறிப்புகளுடன் சென்று கொண்டிருக்கிறது. காடுகளை நோக்கி தவம் செய்ய முனிவர்கள் செல்கிறார்கள். பற்றுக்கொண்டதையெல்லாம் தவிர்ப்பதற்க்காக. ஆனால் பற்றுக்கொண்ட குரங்கு காட்டிலிருந்து நாட்டுக்கு வருகிறது. அப்படி வந்த முதல் குரங்கு தான் மனிதன். அறிதலில் இருக்கும் மகிழ்ச்சியை அறிந்துகொண்டது அது. அதற்க்கான சாவியை கொடுத்தபிறகு, தானாக அது பல இடங்களை திறந்துகொண்டு போகிறது. 

எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயலும் போதுதான் நமக்கு வருகிறது ஞானதுக்கம். அதிலிருந்து வெளிவர மனிதன் பலகாலமு முயன்று வழியைக் கண்டு கொண்டிருக்கிறான். ஆனால் குரங்குக்கு அது சாத்தியமில்லை. வெளிவர முடியாத/தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டது குரங்கு மட்டுமில்லை, நாமும்தான் எனும் போது இந்த கதையின் விரிவு அதிகமாகிறது. ஒவ்வொரு குரங்கும், பூமியில் புதிதாகப் பிறந்த குழந்தைகள்.  

ஒரு அறைக்குள் செல்லும் போது பூட்டை திறந்துவிட்டு சாவியை எங்காவது வைத்துவிடுவோம். எல்லா வேலையும் முடிந்து திருப்பவும் பூட்ட முயன்றால், சாவி கிடைக்காது. திறந்துவிட்டும் போக முடியாது, அதற்க்காக அங்கும் இருக்க முடியாது. சாவியைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதாம். 

Friday, September 24, 2021

சிந்தே - சிங்கம் சிந்தேவானது (ஜெயமோகன் சிறுகதை)

 


கலைகள் என்பது பண்பாட்டுகளின் கண்ணாடி. ஆனால் அது அப்படியே பிரதிபலிப்பதே இல்லை. அதிலிருக்கும் புனைவுதான் காரணம். நிகழ்கால கதை புனைவாக மாறுகிறது. புராணமாகிறது. சர்க்கஸில் பழக்கப்பட்ட சிங்கம்தான் அது. ஆனால் அம்மா சொல்கிறாள் சிந்தே அவரைப் பொறுத்துக்கொள்ளாது. அவளுக்கு ஏனோ அது சர்க்கஸ் சிங்கமாகத் தெரியவில்லை. அப்பவுக்கு அப்படி தெரிகிறது. 

வாழ்க்கையின் சில கணங்கள் அப்படி மாறிவிடுமோ என்னவோ. சிந்தே ஆகிறது அந்த சர்க்கஸ் சிங்கம். அறத்தின் பொருட்டு அப்படி நடக்குமா? எழுதியதற்க்கு பணம் கொடுக்காத செட்டியாரை, செட்டி தார் சாலையில் அமர்ந்து மிரட்டினாலே அதுபோல இருக்குமோ. 

இன்னும் அதை புரிந்துகொள்ள வளர வேண்டும் போல. ஒரு மாயம் இருக்கிறது. அந்த சிங்கம் சிந்தேவானதில். ஒருவேளை சிந்தே பற்றிப் படித்தால் மர்மம் விளங்கும். நிச்சயமாக இது வித்தியாசமான கதை. நிகழ்வை மட்டுமே சொல்லிச் சென்று இருக்கின்ற கதை. 

Wednesday, September 22, 2021

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

 


எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன?

"அறத்தான் இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை"

இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான். 

இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறகும், வேறுவழியில் வெளிப்படும். நிச்சயம் அழிந்து போகாது. 

Tuesday, September 21, 2021

தீவண்டி -வரத்தை பெற்றவர்கள் (ஜெயமோகன் கதை)

 


ஒரு சினிமாபட இயக்குநர் - மாஸ்டர். அவருக்கும் சாமானியமான இக்காவிற்க்குமான ஒரு உறவு இந்த கதையில் மையமாக வருகிறது. ஜான் தன்னை புண்ணியவளானக மாறப்போவதாகவும், தான் இருக்கும் அறையில் ஜீன் இருப்பதாகவும் சொல்லி வைத்திருப்பான். ஜான் இறந்த பல நாட்க்கள் கழித்துக்கூட இழுத்தால் வந்துவிடும் பூட்டைத் திறக்காமல் வைத்திருப்பார். அவர்களுக்கு இடையேடயான உறவு என்பது நகைச்சுவையால் ஆனது. ஜான் நகைச்சுவை விளையாட்டுத்தனமானது. இக்காவின் நகைச்சுவை மாப்பிள்ளைத் தனமானது. 

கதை நடக்கும் பின்னனியை தெரிந்துகொண்டு படித்தால் கதை விரிவடையும் என நினைக்கிறேன். 

இக்கா, ஜான் போன்ற மனிதர்களைப் பார்ப்பது ஆபூர்வமானது. தூய உள்ளமும், இயற்க்கையான மனதும் உடையவர்கள். உண்மையில் கடவுளின் பிள்ளைகள் அவர்கள். ஒரு உயிருக்கும் ஒரு தன்மை இருக்கும். அப்படி உயிர்ன் தன்மையுடனே வாழ்வது ஒரு வரம். அந்த வரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சியடையத் தோன்றுகிறது. 

ஜானின் கடைசி உலக பந்தத்தையும் தீயிட்டு எறித்துவிடுகிறான் கதை சொல்லி. அது நீலநிற ஹூரி இருந்தாள் என இக்காவிடம் சொல்கிறான். நகைச்சுவையான கதை. கதை பல தளங்கள் விளங்கவில்லை. மறுவாசிப்பு தேவை.  

Monday, September 20, 2021

எரிமருள்

 


ந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன்.

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனச் சில ஒவ்வொருவருக்கும் இருக்கும். சாமனியனிம் அந்த தருணம் மறக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் கலைஞனுக்கு அது உச்ச தருணாமாகிறது. "முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்". 

கவித்துவமான கதை. மெளனி அவர்களின் கதை போன்றது. இந்த கதையின் வாசல் எனக்கு இன்னும் திறக்கவில்லை. மறுவாசிப்புக்கு சில காலம் கழித்து உட்ப்படுத்தினால் திறக்கலாம். இதே போன்ற ஆசிரியரின் மற்ற கதைகள் படித்தால், நிச்சயம் விளங்கும். 

வருங்காலங்களில் மீண்டும் குறிப்பு எழுத வேண்டும்.   

Sunday, September 19, 2021

அமுதம்

 


இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது.

முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை).

இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போன்ற விழுமியங்கள் மீது சந்தேகம் எழுவதானால் வரும் அச்சம்/பதற்றம், அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். காந்தியைப் போல. எப்படியாவது அவர்களை/அதை ஒழித்துவிட்டால்தான் நிம்மதியாக இருக்க முடியும். இல்லை என்றால் எப்படி இந்த எதிர்மறை பண்பில், சாதரணத்தில் பன்றி போல படுத்து உருள முடியும்

மூன்றாவது தளம் பெண்கள் சார்ந்தது. இதுவும் ஒருவகையில் காமத்துடனே இணைத்துப்பார்க்கலாம். ஆணின் அகங்காராத்தை சீண்டும் பெண்னை தாங்கிகொள்ள முடியாதவனாகிறான் ஆண். ஒருவேளை அகங்காரம் புண்பட்டுவிட்டாலும் அப்படித்தான் போல. ராமன் எப்படி சீதையை தீக்குளிக்க வைத்தானோ அப்படித்தான் அந்த காட்டுமாட்டையும் அந்த ஊர்மக்கள் செய்தார்கள். 

நான்காவது தளம் விழுமியங்கள் சார்ந்தது. காட்டுப்பசு காட்டின் தெய்வம். அதனை ஊருக்குள் கொண்டுவருவதென்பது தீங்கு விளைவிக்கும் என பூசாரி சொல்கிறான். அந்த பசு மாமிசம் உண்கிறது. தன்னைப் புணர்ந்த காளைகளை அடித்து உண்ணுகிறது. அதனாலே எல்லோரும் அதனிடத்தில் பயம் வருகிறது. குறிசொல்லுபவள், கதிர்மங்கலம் வீட்டுப் பெண்கள் எல்லோருக்கும் அது பெண்தெய்வமாகத் தெரிகிறது ஆனால் ஊரின் மற்ற எல்லோருக்கும் மாடு ரத்தம் உறிஞ்சும் காடேரியாகத் தெரிகிறது. அதனை எரித்து மகிழ்கிறார்கள். ஒருவகையில் இந்த காட்டுப்பசும் முதலாமன் தானே. தன்னை பலிகொடுத்து ஊரைக் காக்கிறது. அதனாலே அது தெய்வமாகிறது.  வேறு என்ன செய்யமுடியும் பலிகொடுத்த பின்?

மறுவாசிப்புக்கு உட்ப்படுத்தினால். இன்னும் நிறைய தளங்கள் திறக்கும் என நினைக்கிறேன்.  

Saturday, September 18, 2021

மலைவிளிம்பில் - நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் (ஜெயமோகனின் சிறுகதை)

 


தன்னையும் தன் தந்தையையும் ஏமாற்றி சொத்துக்களை பறித்துக்கொண்ட சுந்திரத்தை மந்திரம் ஏவிக் கொலை செய்ய காணிக்காரர்களைப் பார்க்க போகும் கதாநாயகனுக்கு சுந்திரம் யாருமில்லாத காட்டில் தனியாக மாட்டிக்கொண்டால். அது விதியா? 

வெறி ஏறி கொலை செய்துவிடுவேனோ எனச் சந்தேகப்பட்டு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக அவனுடைய நிலையில் இருந்திருந்தால் நான் சுந்திரத்தை கொலை செய்திருப்பேன்.  ஒரு சின்ன இடைவெளியில் நான் கதாநாயகனாக மாறிப்போனேன். 

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

விதியின் வழியை நாம் அறியோம். மிக மிகச் சிக்கலான ஒன்று. அதனுடன் நாம் போட்டியிடுவதென்பது, நம் மண்டையை பாறையில் மோதிக்கொள்வதற்க்குச் சமம். ஒன்றைச் செய் என விதி ஆணையிடுகிறது ஆனால் அதைச் செய்தால் ஆயிரம் பிரச்சனைகள் வருமென எண்ணி மனம் நோகிறது. செய்யும் செயலே விடுதலை. இல்லை என்றால் அந்த உயிர் தகுதியற்றதாகிறது. 

"விரும்பிய ஒன்றை பயத்தால் கைவிடுபவன் எதையுமே அடைய தகுதியற்றவனாக தன்னை ஆக்கிக்கொள்கிறான்".

சட்டத்தின் தண்டனையெல்லாம் குற்றத்தை ஆதாயத்துக்காக செய்பவர்களுக்கு. இது விதியின் காரணாமாய் செய்பவர்கள். இது இப்படி இவ்வாறு தான் நடக்கும் என இருக்கும்போது அதை மாற்ற இந்த அற்ப்ப மனிதனுக்கு என்ன தகுதியிருக்கிறது?

உலகமும் அதன் சட்டமும், அறமும் பற்றிய பிரச்சனையல்ல இந்தக் கதை. தன் நெஞ்சறிவதைப் பற்றியது. உளவியல் கதை. 

Friday, September 17, 2021

நெடுந்தூரம் -மாறதது எல்லாமும் அழிந்துபோகும் (ஜெயமோகனின் கதை)

 


பதினைந்து வேலையாட்களை வைத்திருந்த குடும்பம் சோற்றுக்கு கஷ்டப்பட்டு சாகிறார்கள். அவர்களின் கதையிது. முதல் முதலில் கழுகை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரபலம் அடையும் அவர்களின் தாத்தா ஏழு பெண்களை மணந்து கொண்டு பெரிய வீட்டைக் கட்டிக்கொள்கிறார். ஆனால் உலகம் மாறுகிறது, அவனது அப்பா இன்னும் கழுகை வாடகைக்கு விட்டு பிழைப்பதிலே இருக்கிறார்.  கழுகு வைத்திருப்பதே குற்றமேன சட்டம் வந்து, அவர் கைதாகியிருக்கிறார். இருந்தும் அவரும் டில்லியும் கழுகை நம்பியே இருக்கிறார்கள். முன் காலத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர், தற்ப்போது இறந்ததுகூட தெரியாமல், அவரின் உதவியை எதிரி பார்த்துக்கிடந்தனர்.

எப்படிப் பார்த்தாலும் அவர்கள் இன்னும் இறந்தகாலத்திலே இருக்கிறார்கள். அவர்கள் வெகுதூரம் வர வேண்டி இருக்கிறது. ஆனால் தோக்கி நிற்க்கும் கேள்வி, இப்படி மாறும் உலகத்தில் மாறதவர்களை ஏன் இப்படி தண்டிக்க வேண்டும்? கடந்த காலத்தில் வாழ்வது அப்படி என்ன பெரிய குற்றம்? 

கழுகுகள் தன்னை வளர்த்தவன் இறந்துவிட்டான் எனத் தெரிந்ததும் அது அவரை தின்னவில்லை (அவை பசித்திருந்த போதும்). ஆனால் நைனா தான் இறந்த பிறகு இரண்டு நாள் அவைகளிடம் விட்டுவிட்டால், தின்னது போக மீதத்தை வைத்து காரியத்தைப் பண்ணச்சொல்லுவார். அவர் சொன்னது போலவே இரண்டு நாடகள் நைனா இறந்துகிடந்தும் அந்த கழுகுகள் அவரைத் தின்னவில்லை. கழுகுகளும் மாறாமல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

மாறதது எல்லாமும் அழிந்துபோகும்..அதனால் நெடுந்தூரம் வர வேண்டியிருக்கிறது. இது இப்படித்தான? இது சரியா என்ற கேள்வி மட்டும் இன்னும் மனதில் நின்று இருக்கிறது. நிச்சயம் இது அசோகமித்திரனின் சாயல் கொண்ட கதை. 

Thursday, September 16, 2021

புழுக்கச்சோறு -சோறு மட்டுமே பிரதானம் (ஜெயமோகன் கதை)

 


எனக்கு இரண்டு நினைவுகள் சட்டென எழுந்து வந்தது, இந்த கதையைப் படித்து முடித்தவுடன். ஒன்று நான் அம்மை போட்டிருந்த சமயத்தில் உப்பில்லாமல் பத்தியச் சோற்றை போடுவார்கள். அம்மை வடிந்தபின், நீராட்டி லேசான உப்பைச் சேர்த்து கொள்ளுப் பருப்புச் சோற்றை தருவார்கள். அதுவரை நாக்கை கட்டிப்போட்டு சரியாக சாப்பிடாமல் இருந்த நான். அதை வெறிகொண்டு சாப்பிட்ட ஞாபகம். அம்மா உருட்டி உருண்டாக கையில் தருவதை வாங்கி வாங்கி உண்டேன். பின்னாலில் அந்த சுவைக்காக அம்மை போட்டு தண்ணீர் விடும் வீடுகளில் (அம்மை போட்டவருக்கும் சிறு குழந்தைகளும் அந்த கொள்ளு குழம்புச் சாப்பாடு கொடுக்கப்படும்) அழைந்து திரிந்துருக்கிறேன். இப்போது தெரிகிறது நான் ஏன் கொள்ளு குழம்பை மிகவும் விரும்புகிறேன் என. சென்னையில் அது கிடைப்பதில்லை என்றாலும் நான் வீட்டிற்க்குப் போனால் என் அம்மா இன்னும் கொள்ளுக் குழம்பைத் தான் வைத்துதருவாள்.

குழந்தைகள் (முதல் ஒரு வருடம்) எல்லாவற்றையும் சுவை மூலமே அறிகிறார்கள். எதைப் பார்த்தாலும் வாயில் போட்டு சுவைக்கவே நினைக்கிறார்கள். அவர்களின் மற்ற புலன்கள் எல்லாம் முக குறைவாக செயல்படும் போல. எனது மருமகனை தூக்கி வைத்திருக்கும் போது இதை நான் உணர்ந்திருக்கிறேன். மனிதன் நாள் ஆக ஆக அந்த சுவை மறந்துவிடுகிறான். இந்த கதையில் வருவது போல குழந்தையானால்தான் அதை உணரமுடியும் போல அதற்க்கு எல்லாவற்றையும் இழக்க வேண்டும்...பர்ஸ், கிரிடிட் கார்ட், அடையாள அட்டை. 

பொதுவாக நாம் எல்லாவற்றையும் இழக்க நாம் தயாராக இல்லை. யானை துரத்தி அவர்கள் தங்கள் அடையாளங்களை வம்புக்கட்டாயமாக இழக்கவைத்தால் ஒழிய. அப்போது சோறு மட்டுமே பிரதானம் ஆகிறது. மற்றதேல்லாம் மலையின் குன்றில் விழுந்து எங்கோ தொலைந்து போகிறது. போரும் அமைதியும் நாவலில் வரும் ஃபியர் போரில் சிறைபிடிக்கப்பட்டு வெகு தூரம் நடத்திவரப்படுகிறான். மாடமாளிகையில் சொகுசாக வாழந்தவனுக்கு இந்த நிலை மிக கஷ்டமாக இருக்கிறது. ஒரு இளவரசன் கைதியுடன் கைதியாக. அந்த நாளின் இறுதியில் அளிக்கப்படும் சோற்றில் அவன் அதுவரை இல்லாத நிறைவை அடைகிறான். மனிதனுக்கு என்ன வேண்டும்? சோறு..மற்றதேல்லாம் ஆடம்பரமே.....

"என் மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டிருந்தது. எனக்கு நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை. அழுதுவிடுவேன் என்று தோன்றியது."

வேறு என்ன தோன்றும் மனிதனுக்கு? தான் வாழ இதுதான் தேவை எனக் கண்ட மனிதனுக்கு...

Wednesday, September 15, 2021

அருகே கடல் - தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான் -ஜெயமோகனின் கதை

 


கதாநாயகன் இருண்ட வீட்டிற்க்குள் அடைந்து கிடக்கிறான், உணவில்லாமல் புத்தகம் மட்டுமே துணையாக. வீட்டின் எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிடுகிறான் சாவி துவாரத்தை தவிர. அதன் வழியே கடல் உள்ளே வருகிறது. 

தலைகீழான கடல். அது  புனைவில் உருவான கடல். புத்தகங்களின் துணையுடன் அவன் உருவாக்கிக்கொண்டிருக்கும் புனைவு. அருகேதான் கடல் ஆனால் பார்ப்பதை தவிர்க்கிறான். அவன் புனைவில் உருவாக்கிய உலகம் இருள் நிறைந்த துன்பமான உலகம். அதனைவிட்டு வெளியே வரமுடியவில்லை அல்லது அதிலே திளைக்க அவனது மனம் விரும்பியது. புத்தகங்களை எறித்து தனக்கு உணவு சமைத்தவன். 

ஒருசமயம் வெளியே வரும் போது ஒளியாலான கடலைப் பார்க்கிறான். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. எலி எப்படி தன் பொந்துக்குள் சென்று அடைந்து கொள்ளுமோ அப்படி அவனும் ஓடிப்போய் தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

நிறைய படிமங்கள் உள்ள கதை. தலைகீழ் கடல், ஒளிநிறைந்த கடல், சாவி துவாரம்....... இன்னும் நிறைய முறை படிப்பதற்க்கு சாத்தியமுள்ள கதை. 


Tuesday, September 14, 2021

முதலாமன் _ மனுசன்… மனுசனுக்காக பேசுதேன் - ஜெயமோகன் சிறுகதை

 


முதலாமன் சிறுகதை நாட்டார் கதை போல விரிந்து செல்கிறது. எது அறம்? தன்னுடைய மூதாதை கருமலைப்பட்சிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதா? இல்லை தனி மனிதனை தெய்வத்துக்கு கொடை கொடுத்துவிடுவதா? - அவனுடைய விருப்பத்துக்கு மாறாக.

 தலைக்கெட்டுகள் அந்தந்த சாதிக்க நியாயத்தைப் பேசுவான்…அத்தனை சாதிக்க நியாயத்தையும் பேசணுமானா ஒருத்தன் வரணும்”என்று காளியன் சொன்னான்

ஊரில் இருப்பவர்கள் முதலில் ஊருக்காக யாரையும் கொடை குடுக்க சரி என்கிறார்கள். தன் குடும்பம் என்று வரும்போது எல்லோரும் இல்லை என மறுக்கிறார்கள். 

காளியன் தனிமனிதனை ஊர் கைவிடக்கூடாது. அது அறம் கிடையாது என்கிறான். அதே வேளையில் தெய்வம் என்பது கட்டுக்கதை. நம்பமுடியவில்லை என்கிறான். 

கடைசியில் யாரும் முன்வராததால் தான் முன்வருகிறேன் என காளியன் செல்கிறான். ஊருக்காக அவன் முதலாவனாக வருகிறான். அப்படி வருகிறவனின் அதிகாரம் ஊரில் நிலைநாட்டப்படுகிறது (நடுகல்லாக கடவுளாக இருக்கிறார்கள்)

அப்டி அத்தனைபேருக்காகவும் பேசினவருதான் உமக்க கொள்ளுத்தாத்தனுக்க அப்பன் கிருஷ்ணப்ப பணிக்கரு. அவருக்க அதிகாரத்திலயாக்கும் இப்ப நீரு அந்த மேடையிலே ஊருத்தலைவராட்டு இருந்திட்டிருக்கீரு


Monday, September 13, 2021

வரம் - ஸ்ரீ தேவியை கண்டுகொண்ட திருடனின் கதை (ஜெயமோகனின் சிறுகதை )

 

இது முதலில் பார்க்கும் போது திருடர்கள் பற்றிய கதை என்றுதான் தோன்றும். உண்மையில் அப்படி இல்லை. பகவதி அம்மனும் ஸ்ரீ தேவி ஒருவரே. இருவரும் ஒரு காலத்தில் புகழ் பெற்ற இடத்தில் இருந்து நலிந்துவிட்டிருந்தனர். இருட்டு அறையில் கிட்டத்தட்ட யாரும் பார்க்காமல், மறைந்து கிடந்தனர். தான் இருப்பது தனக்கு மட்டுமே தெரியும் என இருந்தனர். 

ஒரு திருடனின் கண்களுக்கு மட்டும் அது தெரிந்துவிடுகிறது. "திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்"

ஸ்ரீ தேவி தன்னை கண்டுகொள்ளும் தருணம் முழு அலங்காரத்தில் இருக்கும் அம்மனைப் பார்க்கும் போது. இருளின் (எதிர்மறையின்) நிலையிலிருந்து ஒளியைக் கண்டுகொண்ட தருணம். கற்ப்பகிரகத்தின் ஒளி அது. நிச்சயமாக ஸ்ரீ தேவி மறைந்த பின்னால் அவளது குடும்பம் அவளை தெய்வமாக்கும், காரணம் அவள் வந்த பின்னால் சாதராண டீக்கடை ஓட்டல் ஆகிறது, பொருள் வருகிறது. மகாலட்சுமி இல்லையா அவள். வீட்டை நிறைக்கிறாள், மனதை நிறைக்கிறாள். 

யாருக்கு யார் கொடுத்த வரம்? பகவதி பகவதிக்கே (ஸ்ரீ தேவிக்கு) கொடுத்த வரம். திருடன் ஒரு கருவிதான். நாமெல்லாம் திருடர்கள். சாட்சி மாத்திரமாக மட்டுமே இருப்பவர்கள். ஆற்றல் சக்தி அங்கிருந்துதான் வரவேண்டும். தேவியின் அருளுக்காக வரத்திற்க்காக ஏங்கி நிற்ப்பவர்கள் நாமெல்லாம். ஸ்ரீ தேவியை கண்டுகொண்ட திருடனின் கதை.


https://www.jeyamohan.in/134069/ 

Tuesday, January 5, 2021

மோக முள் பற்றிய எனது புரிதல்கள்

வணக்கம் குருவுக்கு, தாங்கள் நலமா? இன்று மோக முள் படித்து முடித்தேன். உடனே அதனை பற்றி எழுதிவிட நினைத்ததன் விளைவு இந்த கடிதம். பிரமிள் ஒரு கட்டுரையில் காமம் தான் அடிப்படையான சக்தி, அதுதான் ஒருவனைக் கலைஞனாக்குகிறது (கவிஞனாக்குகிறது) என்கிறார். எனக்கு அப்போது இருந்த எண்ணம் காமம் வேறு, கலைகளைப் படைக்கும் சக்தி என்பது வேறு. முன்னது பாவமானது, பின்னது புனிதமானது. ஆனால் இந்த வேள்வி பல நாட்கள் என்னுள் இருந்து கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் சுதர்ம்மா பற்றித் தேடிக்கொண்டிருக்கிற எனக்கு இது முக்கியமான கேள்வியாக இருந்தது. ஏன் ராஜத்திற்க்கோ அல்லது அவனது கல்லூரியில் படித்த அவனது வயதை ஒற்றிய பையன்களுக்கோ பாபுவைப் போலத் தடுமாற்றம் இல்லை. ராஜம் மிகத் தெளிவான முன் முடிவுகளோடு இருக்கிறான். பெண்களை மனதில் வைத்துப் பூசிக்கிறான். பாலு தன் பூத்துக் குலுங்கும் காமத்தை அடக்க முடியாமல் தவிக்கிற ஆளாக இருக்கிறான். ஒரு பக்கம் ராஜத்தைப் போலப் பெண்களைப் பூஜிக்க முயலுகிறான், மறுபக்கம் தங்கமாளுடன் உறவும் கொள்கிறான். இது எல்லா மனிதர்களுக்குமான தவிப்பாய் இருந்தாலும், பாலுவுக்கு மித மிஞ்சி இருப்பது அவன் கலைஞனாக இருப்பதால் தான். காதல் என்ற புனித/சமூகம் கண்டு பிடித்த அழகான விசயமாகவோ அல்லது கலையாகவோ காமத்தை மடைமாற்றலாம் (உலகியல் வாழ்க்கையைக் கணக்கில் கொண்டு). இது இரண்டும் இல்லை என்றால் அது உடல் சார்ந்த ஒன்றாக மாறி அவன் ஆளுமையை அழித்துவிடும். வெற்றிடத்தைக் காற்று நிரம்புவதைப் போலக் காமம் நிரப்பிவிடும், கலைஞர்களுக்கு மிகப் பொருந்தும் வரி அது. காமத்தைக் கண்டு அஞ்சுகிற, தப்பானதாக நினைக்கிற சாதாரண மனிதனின் மனநிலையில் பாலு தங்கமாவைப் பார்க்கிறான். தங்கமாளுக்கு (காமத்திற்கு) அஞ்சி, தான் செய்தது யமுனாவுக்கான (காதலுக்கு) துரோகமென அவளிடமே போய் தவற்றை ஒத்துக்கொள்கிறான். அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டுக் காத்துக்கிடக்கிறான். மறுபுறம் சங்கீத கலையைக் கற்க புது குருவைக் கண்டடைகிறான். கலையின் மூலம் அவளை மறக்க/கடக்க முயலுகிறான். (காமத்தை மடை மாற்றம் செய்கிறான்). இருந்தாலும் காதலும், கலையுமாக அவன் ஊசலாடுகிறான். அவன் அப்பா மற்றும் ராமண்ணா அவனிடம் காமத்தை அடக்கி கலையில் செலுத்துவதைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்பா பூடகமாகவும், ராமண்ணா நேராகவும். கலையை அடைவதென்பதில் இருக்கிற சிக்கல் பற்றிய நாவல் என்பதே என் எண்ணம். இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தவுடன் மனதுக்கு விலக்கமாக இருந்தது, பெண்கள் எல்லோரையும் மனதில் வைத்துப் பூசிக்கிறவன் என்ற சித்திரம். ஒருவன் வெளி உலகுக்கு அப்படி வேண்டுமானால் நடிக்கலாம் ஆனால் உள்ளூர அப்படி இருப்பார்களா என்பது சந்தேகமே? ஆண் பெண்ணை தனக்குச் சமமாக நினைப்பதே மிகப் பெரிய ஒன்று. ஒருவேளை அவன் காதலில் இருக்கும் சமயத்தில் மட்டும் அந்த பெண் வேண்டுமானால் அதி மானுடனாகத் தெரியலாம். பாலுவின், ராஜத்தின் அக மனம் இப்படி நினைக்கும் என எண்ணுவது கடினமான இருக்கிறது. ஒருவேளை நான் இந்த காலத்திலிருந்து அந்த கால மனிதனை எடை போடுவது என்பது தவறாகக் கூட இருக்கலாம். ராமண்ணா போல இருந்துவிட வேண்டுமென ஆசைப்படுகிறேன். வாழை மரத்தில் விழுந்த மழைத்துளியைப் பார்த்து ரசிக்கிற ஆளாக இருப்பது எப்படிப் பட்ட வரம். நத்தை ஊர்வதைப் பார்த்து அவர் அடையும் மகிழ்ச்சி. அந்த வாழ்க்கை கிடைத்துவிடாத என்ற ஏக்கம் இருக்கவே செய்கிறது. குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவு எவ்வளவு முக்கியம்? உண்மையான குரு நம்மை ஞானத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே செல்கிறார், நம்மை அறியாமலேயே. ராமண்ணா உயிருடன் இருக்கும்வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அவர் வழியே ஞானத்தின் சில கூறுகளை அறிந்துகொள்ள முடிந்தது. அவர் பாலுவைக் கச்சேரி பண்ண வேண்டாம், கலை என்பது காசு பண்ணுவதற்காக இல்லை, தன் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு எனச் சொல்லி அவனைக் கச்சேரி பண்ணாதே என அறிவுறுத்துகிறார். ராமுவையும், மகாராஷ்டிரா சங்கீத வித்துவானையும் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தால் புரிகிறது அது. முன்னவன் தன் முழுமை அடையாத கலைக்காக ஏங்குகிறவன், ஆனால் அதை வைத்து பணம் பண்ணுகிறான். பின்னவர் கலையை முழுமை அடைந்தவர், எனினும் தனக்கு வந்த பணத்தைக் கோவில் உண்டியலில் போட்டுவிடுபவர், இரயில் சந்தடியில் உறங்குபவர், தேசாந்திரியாக அலைபவர். உலக லாபத்திற்காகக் கலையைக் கைக்கொண்டவனா?ஞானத்தை அடைவதற்குக் கலையைக் கைக்கொண்டவனா? யார் கலைஞன்? யாருக்குக் கலை வாய்க்கும்? அதனால் என்ன பயன்? இந்த வினாவை எழுப்பிவிட்டுக் கதை எங்கோ தள்ளிப் போய்விடுகிறது. காமம்-காதல்-கலை எனக் காமத்தின் பல பரிமாணங்களைத் தொட்டு மட்டுமே செல்லுகிறது இந்தக் கதை. நிச்சயம் ஒன்று மற்றொன்றை வெட்டி செல்லாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது, அதனால் ஆழமான தரிசனப் பார்வை கதைக்கு வாய்க்கவில்லை. இதைச் சாதாரண ஆண்-பெண் காமத்தைப் பேசும் கதை எனக் கடந்து போக வாய்ப்பில்லை. காரணம்: ராஜம் (சாதாரண மனிதன்) * பாலு (கலைஞன்) – ராமண்ணா (குரு) * பாலு (குழப்பமான சிஷ்யன்), மகாராஷ்டிரா சங்கீத வித்துவான் (கலைஞன்- ஞானி) * ராமு (கலைஞன் போல), பாலு (கலைஞன்) * தங்கம்மா (காமம்), பாலு (கலைஞன்) * யமுனா (காதல்). கலையை அடைய ஒருவன் எவ்வளவு தூரம் தன்னை அதற்குப் பழக்கப் படுத்த வேண்டும். ராகத்தைப் பாடிப் பாடி அதன் அழகைக் கண்டுபிடிக்கிறான் பாலு. ராமண்ணா இறந்த பிறகு, அவன் தனிமையில் அமர்ந்து சாதகம் பண்ணும் போது இவ்வாறு உணர்ந்து கொள்கிறான், “கச்சேரில ஒவ்வொரு ராகத்தையும் சாதகம் பண்ண எங்க நேரம், முணு மணி நேரத்துக்குள்ள எல்லாம் அதைப் பண்ண முடியாது. கச்சேரி பின்னால ஓடின அப்புறம் எங்க ரசிக்க காசுக்காக அத கூறு போட்டு விக்கலாம்”. ஓ! இதற்காகவா நம்மைக் கச்சேரி பண்ண வேண்டுமென ராமண்ணா சொன்னார் என உணர்ந்து கொள்வான். அதன் பின்னால் கதை காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதைப் போல மாறிவிடுவது, இதுவரை அளித்து வந்த அனைத்து சாத்தியக்கூறுகளையும் உதறிவிட்டு காதலை மட்டும் பேசு பொருளாக எடுத்துக் கொண்டதைப் போல (காமம்-காதல்) தோன்றுகிறது. அதுவும் எங்குமே எதீரிடில்லாது இருப்பது (முன்பு சொன்னதைப் போல) ஆழமில்லாததைப் போன்று இருக்கும் தோற்றதை அதற்குக் கொடுக்கிறது. நன்றி, மகேந்திரன்

Monday, January 4, 2021

வாசகர் கடிதம்: முதற்கனல் - வெண்முரசு

முதற்கனல் நாவலை படித்ததும் எழுதும் கடிதமிது. நாவலின் அமைப்பு இதற்க்கு முன் பழக்கம் (எனக்கு) இல்லாத ஒன்றாக இருந்தது. கதைக்குள் கதை. மேலும் வரலாறு ஒருவகை தொன்மாக முன் வைக்கப்படுகிறது. அதன் மாயங்களை எல்லாம் நிகர் கால வராலாற்று கருவிகளால் விலக்கி தட்டையாக்காமல், இன்னும் மாயங்களாகவே முன் வைப்பது ஆனந்தமாக இருந்தது. மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பகுத்து தன் அறிவுக்கு உட்ப்பட்டதாக மாற்றுகிறான்.அது நல்ல விசயம்தான், அதே சமயம் அவனது வாழ்க்கை இப்படித்தான் என முன்னரே வகுத்துவிட்டால் எப்படி இருக்கும்? நிச்சயம் சலித்துப் போவான். அப்படி வரலாற்றையும் பகுத்து, ஐயம் திரிபுர சொல்லிவிட்டால்? நிச்சயம் கொடுமை. கற்ப்பனைக்கு வழி இல்லாமல் மனிதன் தற்க்கொலை செய்யவும் நேரலாம். நல்ல வேளை அது நடக்கவில்லை என்பது மகிழ்ச்சி. நான் மகாபாரதக்கதையை முழுவதும் அறிந்தவனில்லை. முதற்கனலில் கதை எனக்கு புதிது. அம்பையின் கண்ணீர் சிகண்டியின் வழி முதற்கனல் ஆனது. எனக்கு தெரிந்து ஆண்கள் நீர்நிலையின் மேல்தளத்தை போன்றவர்கள். மேலோட்டமாகப் பார்க்க அவர்கள் வீரர்களாகவும், புரட்சிக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்தும் ஆழ் மனம் என்னவோ பெண் எனத் தோன்றுகிறது. அம்பை முதலானவர்களை பீஸ்மர் தானக அஸ்தினாபுரிக்கு தூக்கி வரவில்லை. தன் அன்னையின் அணையை ஏற்றுதான் அதனை நிறைவேற்றுகிறார். அதே போல சிகண்டிக்கும் பீஸ்மருக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால் தன் அன்னையின் பொருட்டு பழிவாங்க நினைக்கிறான். முதற்கனலே இரு பெண்களின் ஆசைக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஆண்களின் கதைதான். கதையில் அனைத்து ஆண் மகனையும் ஏதோ ஒரு பெண் ஆட்டுவிக்கிறாள். ஃபால்குனர் சொல்கிறார், அரசுகள் செறிகளால் ஆளப்படுகிறது, உணர்ச்சிகளால் அல்ல என்கிறார். அந்த நெறியை தொடர்ந்து பாதுகாத்து வருபவர்கள் பெண்கள்தான். மாற்று மதமோ, சாதியிலோ கல்யாணம் செய்தவர்கள் அப்பாவைக்கூட சம்மதிக்கவைக்கலாம், ஆனால் அம்மாவை முடியாது. இங்கு பண்பாடு என்பதே பெண்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றுதான். அவர்கள் நினைத்தால் எதையும் மீறலாம். உதாரணமான பீஷ்மரை, காசி நாட்டு இளவரசிகளை தூக்கிவரச் சொன்னது. நான் பின்தொடரும் நிழலின் குரலில், ஆண்களின் புரட்ச்சிதான் ரத்தமாக ஓடுகிறது, இதுவே பெண்கள் பண்ணி இருந்தால் எப்படி இருக்கும்? என வினாவாக எழுப்பப்பட்டிருக்கும். உண்மையில் பார்த்தால் எல்லாம் பெண்கள் தான் போல. கல்லைத் தூக்கிப் போட்டால் எப்படி குளம் கலங்குமோ, அது போலதான் ஆண்களும். இந்த நாவலுக்கும் மற்ற நாவலுக்கும் இருக்கும் வித்தியாசமாக நான் நினைப்பது. முழு விழிப்பு நிலையிலும் இல்லாமல், கனவிலும் இல்லாமல், இந்த நாவல் தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஓடுவதை சில சமய்ங்களில் நினைத்து சிரித்துக்கொள்வேன். முக்கியமாக பீஷ்மர் கையில் முள்ளுடன் பாலைவனத்தில் நின்றது பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் இந்த நாவலைப் பற்றி வரும் நாட்களில் எழுதலாம் என நினைக்கிறேன்.

Saturday, January 2, 2021

கலைஞன் - சிறுகதை

சர்மா வெற்றிலையை தன் வாயில் அடக்கவும் காதர் எங்கள் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது. இருந்த ஒரு படத்தையும் ஸ்டுடியோ முடித்துவிட்டதால், அடுத்த வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். உடனே வரும் என்று தோன்றவில்லை. ஒரு வகையில் சும்மா உக்காந்து சம்பளம் வாங்கிக்கொண்டு போகலாம்தான். ஆனால் அதுவே வருடக்கணக்கானால், சும்மா இருப்பதைப் போன்ற ஒரு சுமை வேறு இருக்காது. எங்கள் லன்ச் டைம் முடிந்ததும் தூக்கம் போடாமல் இருக்க எதாவது ஊர் வம்பு பேசிக்கொண்டிருப்போம், ஆனால் இந்த மே மாத வெயிலின் புளுக்கம் தாங்காமல் கையில் கிடைத்த அட்டையை விசிறியாக ஆட்டிக்கொண்டிருந்தோம். சர்மா இன்னும் தன் உடலை என்னவோ கன கச்சிதமாக வைத்திருந்தார் ஆனால் அவரது கிராக்கிதான் இப்போது கொஞ்சம் இறங்கித்தான் போனது. ஒவ்வொரு பத்தாண்டும் சினிமாவின் போக்கு மாறிக்கொண்டே இருக்கும் அதில் பழையது முழ்கி புதியது வெளியே வரும் என சாமிக்கண்ணு நேற்று லன்ச் டைம்மில் சர்மா பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார். எப்படி மறுபடியும் பழைய இடத்தைப் பிடிப்பது என்று எனக்கு நன்றாக தெரியும் என்பதைப் போல வெற்றிலையை மென்று கொண்டிருந்தார். 

ஒரு கால் குட்டையான நாற்க்காலியின் பின்புறத்தை பிடித்துக்கொண்டு நின்றான் காதர். முன்னால் எப்படி வந்து நின்றானோ அதே போல. ஆனால் அவனது உடல் மட்டும் குறுகிப்போய், பத்து வயது சிறுவன் போல இருந்தான். 

வெள்ளை சொன்னாங்க....சர்மாவைப் பார்த்து பேச வந்தவன் அப்படியே தலையை கீழே போட்டுவிட்டான். 

சர்மா புளுக்கம் தாங்கமல் தன் மேல் பட்டனை கழட்டிவிட்டு, வெற்றிலையின் கார்வையை போக்க ம்க்க்க்க்க்..என செறுமினார். 

காதர்..நிமிர்ந்து சர்மாவைப் பார்த்தான். இல்லைங்க...தலையை சொறிந்தான். நீங்க தேடறது தெரிஞ்ச நா ஓடிவந்துருப்பங்க.. குற்றம் செய்தவன் போல கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.

இப்ப எனக்கே வேலை இல்ல நா ஒன்னும் பண்ண முடியாதுப்பா....

சார்..நீங்கலே இப்படிச் சொன்ன என்ன பண்ண முடியும்ங்க.....வாயில் கையை வைத்து கேவ ஆரம்பித்தான் காதர். ஒரு பிள்ளை நாலு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சுங்க.பொண்டாட்டி என்ன வீட்டுக்குப் போன கொலகாரன்னு சொல்லி திட்டறா...குலுங்கி குலுங்கி அழுகிறான்.

சர்மா என்ன சொல்வதேன தெரியாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தார். 

பிள்ளைக சாப்பிட்டு ஒரு வாரமாகுந்துங்க...என்ன பண்றதுன்னு தெரிலைங்க.காதர் திரும்பி எங்களைப் பார்த்தான். பிறகு தன்னை தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தான். அவனது உடல் முழுக்க வியர்வை வழிந்துகொண்டிருந்தது. உங்க கம்பனில எதாவது வேல இருந்த போட்டுக்கொடுங்க சார்...

எங்களுக்கே வேல இல்லையேப்பா!! உனக்கு எப்படி வேல குடுக்கறது? சர்மா கோவப்படுவார் என நினைத்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு அவர் கதை இலக்காவில் பேசி டைகர் ஃபைட்க்கு மற்றவர்களை சம்மதிக்க வைத்தார்? ஆனால் அந்த ரோலைச் செய்ய காதர்தான் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரே வெள்ளையை அழைத்துக்கொண்டு போய் தேடி அலைந்தார். கடைசிவரை கிடைக்காமல் போனது அவருக்கு பயங்கர கோவத்தை வரவைத்தது. ரோல் கேக்கரானுக, கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்தா ஆளப் பிடிக்க முடியறது இல்ல. இனி யாரவது வரட்டும்? என கோவமாக திட்டுகொண்டிருந்தார் கடைசி கட்ட படப்பிடிப்பு சமயத்தில். அதில் துளி கோவம் கூட இல்லாமல் இப்போது காதரிடம் பேசுவது சற்று ஆச்சரியம்தான். 

எனக்கு ரோல்ன்னு எதுவும் வேணாங்க..என்ன வேலைன்னாலும் செய்யற என்றான் காதர். 

சர்மா யோசித்தார். காதுகளை நீவிவிடுவது அவரது பழக்கம். நா பாத்துட்டு சொலற..

நீங்க பாத்து எதாவது செஞ்சாத்தா உண்டு சார் என அவன் மறுபடியும் கேவினான்.

நா வேல பாத்து வைப்ப, நீ எங்காவது ஓடிப்போயிருவ இல்ல என கோவமாகக் கேட்டார். 

இல்ல சார் டேய்லி இங்க வந்து உங்கள பாத்துட்டுதா வேற எங்காவது போறதுன்னா போவ என தன் உடலைக் குறுக்கிகொண்டு கண்களை துடைத்தான் காதர்.

ம்.....ஒரு வாரங் கழிச்சு வா! நா வேற பக்கம் பேசிட்டு சொல்றம்ப்பா!! 

வேற பக்கங்களா? 

ஏ வேற பக்கம் போகமாண்டயா? ஏய்யா? இங்க எங்களுக்கே வேல இல்லைங்கற.. சர்மா கோவப்பட்டால் சற்று முன் நகர்ந்து கைகளை உயர்த்திப் பேசுவார். 

இல்லைங்க...இங்கயே வேல செஞ்ச, நீங்க படம் எடுக்கறப்ப ரோல் தருவீங்க...வேற பக்கம்ன்னா அப்படி முடியாதுங்க...

எல்லோரும் காதரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

நா வேற வேல செய்யறதுன்னு சொன்னதே, ரோல் கிடைக்கும்கிறதுக்காகத்தா என்றான் காதர். 

உனக்கு அறிவு இருக்காயா? புள்ள குட்டிக சோறு இல்லாம கிடக்குது உனக்கு ரோல்தா முக்கியமா? சர்மாவின் கோபம் உச்சத்துக்கு வந்துவிட்டது.  காதர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டான்,

அப்புறம் பொண்டாட்டி திட்டாம என்ன செய்வா? சொல்லுய்யா? தனது பாக்கெட்டில் கையைவிட்டார் சர்மா.

ஐய்யோ வேணாமுங்க!! எனக்கு வேலமட்டும் இங்க போட்டுகுடுங்க அது போதும் சார் என்றான் காதர்.

சில்லறைகளை எடுத்து மேஜை மேல் வைத்தார். எங்களிடம் இருந்தது எல்லாம் சேர்த்து நாலு ரூபாய் தேறியது. போ!! போயி கேன்டில்ல சாப்பிடு..ஒரு வாரம் கழிச்சு வா..நா என்னால் என்ன முடியுமோ பாக்கற என்றார் சர்மா.

காசை வாங்கிக்கொள்ளவில்லை என்றால் சர்மா கோவப்படுவார் என நினைத்து அதை வாங்கிக்கொண்டான். எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினான். 

சரியாக அடுத்த வியாழக்கிழமை எங்கள் காரியாலையத்துக்கு வந்தான், அன்று சர்மா அவரது நெருங்கிய உறவினர் சாவுக்குச் சென்றிருந்தார். காதர் அவரது இருக்கை காலியாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்தான். சரிங்க...நா வந்தேன்னு சாருகிட்டச் சொல்லுங்க..அடுத்த வாரம் வந்து பாக்கறேன்னுங்க எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.  

எல்லோரும் காதரை கிட்டத்தட்ட மறந்துவிட்டோம் என நினைக்கின்ற தருணம் வெள்ளை வந்தான். அன்று காலை மணி பதினொன்று இருக்கும். சர்மா வெள்ளையைப் பார்த்து என்னய்யா இன்னும் பட ஆரம்பிக்கலையே என்றார்.

வெள்ளை எப்போதும் குழைக்கும்பிடு போட்டுவிட்டு, கள்ளச் சிரிப்பு சிரிப்பான். ஆனால் இன்று அப்படி எல்லாம் இல்லாமல் அவனது முகம் இருகிப்போயிருந்தது. சர்மா அப்போதுதான் அவனது முகத்தை கவனித்தார்.

வெள்ளை எப்போதும் ஒரு கால் குட்டையான நாற்க்காலிக்கு இரண்டடி தள்ளி நின்றுதான் பேசுவான். சார்..டைகர் ஃபைட் காதர் மண் லாரில அடிபட்டு செத்துப்போயிட்டானுங்க என்றான். 

எங்கள் எல்லோருக்கும் அது அதிர்ச்சியாக இருந்து. சர்மா அவனைப் பார்த்து, எப்பய்யா? என்றார்.

நேத்துதானுங்க...இங்க அவ வரம்போது அப்படி ஆயிடுச்சுங்க..என்றான். சர்மா கண்கள் கலங்கிப்போய்விட்டது. இப்படி ஆயிபோயிருச்சேய்யா? எங்கள் எல்லோரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார். அவ குடும்ப இப்ப நடுத்தெருவுல நிக்குதுங்க சார் என்றார் வெள்ளை.

நா என்னய்யா பண்ணறது என்றார் சர்மா? 

வெள்ளை ஜாபர் என அழைத்ததும், அதுவரை எங்கள் அறைக்கு வெளியே நின்றிருந்த பனிரண்டு வயது பையன் ஓடி வந்து வெள்ளை பக்கத்தில் நின்றான். நாங்கள் அந்த சிறுவனை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தோம்.

காதரோட பெரிய பைன்ங்க...ஜாபர் கும்பிட்டுக்கொண்டான். இப்ப நா என்ன பண்ணனும்ப்பா என்றார் சர்மா.

எனக்கு எதாவது ரோல் இருந்த குடுங்க என்றான் அந்த சிறுவன்.

ரோலா? உனக்கு என்ன ரோல் தற்றது? அதுமட்டும் இல்ல இங்க இப்ப படம் எடுக்கலையே? வெள்ளை உனக்கு தெரியாதா என்ன? எதுக்கு கூட்டிட்டு வந்த?

எனக்கு டகர் ஃபைட் தெரியும்ங்க...நீங்க பாக்கறீங்கலா எனச் சொல்லிக்கொண்டு, துணிப்பையிலிருந்து காதரின் அதே முகமூடியை எடுத்தான் ஜாபர். 

பின்குறிப்பு: அசோகமித்திரன் அவர்கள் எழுதிய புலிக்கலைஞன் என்னும் சிறுகதையின் தொடர்ச்சி. புதிய முயற்ச்சி. 

சுடர்விட்டு எரியும் தீப்பிழம்பு

கோவில்கள் பற்றிய மிக முக்கியமான புத்தகமாக குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "தமிழ் கோபுரக்கலை மரபு" என்னும் புத்தகத்தைச் சொல்லலாம். 




இந்த புத்தகம் ஒரு ஆரம்ப வாசகனுக்கு தமிழக கோவில்கள் மற்றும் சிற்ப்பங்கள் பற்றிய அரிய வாசலைத் திறக்கும் என நம்புகிறேன். இவர் ஆய்வுக்காக இலக்கியம், கல்வெட்டுக்கள், புதை பொருட்க்கள் (உதாரணமான நாணங்கள்) மற்றும் கோவில் சிற்ப்பங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

சொல் ஆய்விலிருந்து கோபுரங்களைப் பற்றிய ஆய்வு துவங்குகிறது. மாட்டுக் கொட்டில் எப்படி கோபுரம் ஆனது என்பதையும் அது எப்படி தமிழகம் வந்தடைந்தது என்பதும் மிக சுவாரசியமான பதிவு. சுடர் விட்டு எரியும் தீப்பிழம்பு எப்படி கோபுரத் தத்துவமானது என்பதும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம். 


கோபுர கட்டுமானம் பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு இல்லாமல் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் பழமை பற்றிய ஆராய்ச்சி ஆச்சரியமடைய வைக்கிறது. தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை என பட்டியல் நீள்கிறது. திருவானைக்கா கோபுரம் அடித்தள கட்டுமானத்துடன் நின்று போனதால், கோவில் கட்டுமானம் எப்படி ஆரம்பிக்கும் என்பதை அறிந்த்து கொள்ள அது முக்கிய ஆவணமாக இருக்கிறது. பொதுவாக எல்லா கோவில்களின் அடித்தளம் மட்டும் கற்க்களால் கட்டப்பட்டு, அதற்க்கு மேல் செங்கற்க்களால் கோவில் உருவாக்கப்படும். அதற்க்கு சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமான தஞ்சைப் பெரிய கோவில். அது முழுவதும் கருங்கற்க்களாலே உருவாக்கப்பட்டது. அதுவேகூட அதன் தனிச் சிறப்பு எனலாம். 

கோவிலின் ஓவியங்கள் மற்றும் அரண்மனைகளின் ஆய்வும் முக முக்கியமாகப்படுகிறது.  இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள் பற்றிய ஆய்வும் இருக்கிறது. கடைசியாக சிற்ப்பங்களைப் பற்றி புரிந்துகொள்ள ஏதுவாக அதன் விளக்கங்கள் அமைந்துள்ளன. 

நிச்சயம் இந்த புத்தகத்தப் பற்றியும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றியும் விரிவாக பின்னாலில் எழுதும் வாய்ப்பு அமையுமென நினைக்கிறேன். 

குடவாயில் பாலசுப்பிரமணி அவர்களின் முகநூல்

Friday, January 1, 2021

விடாத பூதம்

இந்த பூதத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது. தெரியாது என்று சொன்னால் நிச்சயம் நீங்கள் இன்னும் குழந்தைதான். விக்கிரமாதித்தியன் கதையில் வரும் வேதாளம் போலதான் இதும். விடுகதை போல கேள்வி கேட்க்கும், பதிலைச் சொன்னால் மற்றொரு கேள்வி. பதில் தீர்ந்து, தாகம் எடுப்பவன் தண்ணீருக்கு அலைவதைப் போன்ற நிலைமையை அடைந்த பின்னால் என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும். அப்பப்பா!! அந்த நேரம் எனக்கு வரும் கோவம் இருக்கிறதே!! உங்களுக்கு தெரியாததா அது. நான் யார் என முதலில் பாசமான நாய் போல வந்து நக்கி மேலே விழுந்து நய்ச்சியமாகக் கேட்க்கும்.

சின்ன வயது என்னை பழைய போட்டோக்களில் பார்க்கிறேன். இப்போது இருக்கும் உடலை கண்ணாடியில் பார்க்கிறேன். சர்வ நிச்சயமாக அதும் இதும் ஒன்றல்ல. சில சமயம் அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியானால் நான்தான் அது (சின்ன வயது போட்டோவில் இருப்பது) என்று எப்படிச் சொல்ல முடியும்?  இன்னும் வயதானால் நிச்சயம் மாறிப் போவேன். அப்போது இந்த குழந்தை போடோவுடன் ஒப்பிட்டால், யாரும் நம்ப மாண்டார்கள். என்னை சிறுவயது முதல் வயதானது வரை நான் என எண்ண வைப்பது எது? உடலை நான் எனச் சொன்னால் சிரிப்புதான் வரும் இல்லையா? ஏனேனில் அது மாறும் ஒன்று. மாறாத ஒன்றையே நாம் எப்போதும் இது என அடையாளப் படுத்த முடியும். 

தண்ணீர் கட்டியானால் அது ஐஸ்க்கட்டி. யாரும் அதை தண்ணீர் என்று அழைப்பதில்லை. ஆனாலும் அதில் தண்ணீர் இருப்பதை யாரும் மறுக்க மாண்டாய் என நினைக்கிறேன். சில சமயம் அது ஆவிகூட ஆகலாம். அப்போதும் அதில் தண்ணீர் இருப்பதை மறுக்கமுடியாது. வேறு பெயர்கள் ஆனால் உண்மை ஒன்றுதான். அப்படியானால் அதே விசயம் நமக்கும் பொருந்தும்தானே? பூதம் இப்போது வேற்று வீட்டு நாய் போல வளர்த்த நம்மையே பார்த்து குரைக்கும்.

நான் என்பது உடல் என்ற வாதம் சரி எனப்படுகிறது. அப்படா என நான் திருப்திபட்டுக் கொள்ளும் போது, மறு கேள்வியால் அது என்னை மாடியிலிருந்து கீழே தள்ளிவிடுவது போல இருந்தது. உடல் என்பது வெறும் ஊர்திதான்.  இறந்த பின்னால் உடல் இருக்கும் ஆனால்  நீ இருக்க மாண்டாய்தானே ? ஏன் என்றால் அதை நான் என்று சொல்ல நீயே இருக்க மாண்டேன். அப்படியானால்  நான் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை என்றது.

உயிர் தான் நான்!! ஹாஹா.....மகிழ்ச்சி..ஏ!! பூதமே கண்டுபிடித்துவிட்டேன் என்னை விட்டு ஓடிவிடு, இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழவிடு. நான் செத்த பின்னால், என் உடலை யாரும் நான் என அழைப்பதில்லை அதனால் நான் என்பது உயிர் தான். எனக்கு அதில் துளிகூட சந்தேகம் இல்லை. மரங்கள் துளிர்விடுவதைப் போல பூதம் கேள்விகளை வீசிக்கொண்டே இருக்கிறது. வெட்ட வெட்ட தலை வரும் அரக்கன் போல அது. 

தூங்கும்போது நீ எங்கு இருக்கிறாய்?  நீ கிட்டத்தட்ட செத்துப்போனவன் தானே? அப்படியானால் உனக்கு அப்போது உயிர் இல்லை. ஹாஹா!!! பதிலுக்கு அந்த பூதம் என்னைப் பார்த்து நகைத்தது. கோபம் வரும் இல்லையா? நீங்களே சொல்லுங்கள்? எத்தனை அணைக் கட்டினாலும் உடைத்துக்கொண்டு வருகிறது இது. 

அப்படியானால் நான் என்பது இந்த உள் உணர்வுதான். என் ஐந்து புலன்களும் இல்லை என்றாலும் என்னால் என்னை உணரமுடியும். கனவுகள். அதில் வேறோரு உலகத்தில் நான் இளவரசிகளுடன் காதல் செய்ய முடியும், எதிரிகளுடன் போர் செய்து சாக முடியும்...உண்மை என்னவென்றால் என்னால் உயிர்தேல முடியும்?  இப்போது என்னவோ நான் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன் எனத் தோன்றுகிறது. பூதத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. அது என்னை ஒரு நாளும் நிம்மதியாகவிட்டதில்லை. அப்படி நகைக்காதே!!

கோமாவில் இருப்பவனுக்கு உடலுமில்லை, உயிருமில்லை, உள் உணர்வும் இல்லை. அப்படியானால் அவன் யார்? பூதம் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள மறுபடியும் கேட்டுவிட்டது. கண்டிப்பாக இந்த முறை அது என் தர்க்கத்தை தாண்டிப் போய்விட்டது. நான் என்பது அந்த மூன்றும் இல்லைதான் ஆனால் நான் இருக்கிறேன். ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அந்த மூன்றும் இல்லாத போது எது தன்னை அது எனச் சொல்லிக்கொள்ள முடியும்? தன்னைச் சுட்ட அதனால் முடியாது ஆனால் அது இருக்கிறது. தர்க்கம் நின்று போனது, இதற்க்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.  ஆ!! இந்த முறையும் அந்த பூதம்தான் வென்றுவிட்டது. விடமாண்டேன்!!!!!! 



பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...