எனக்கு இரண்டு நினைவுகள் சட்டென எழுந்து வந்தது, இந்த கதையைப் படித்து முடித்தவுடன். ஒன்று நான் அம்மை போட்டிருந்த சமயத்தில் உப்பில்லாமல் பத்தியச் சோற்றை போடுவார்கள். அம்மை வடிந்தபின், நீராட்டி லேசான உப்பைச் சேர்த்து கொள்ளுப் பருப்புச் சோற்றை தருவார்கள். அதுவரை நாக்கை கட்டிப்போட்டு சரியாக சாப்பிடாமல் இருந்த நான். அதை வெறிகொண்டு சாப்பிட்ட ஞாபகம். அம்மா உருட்டி உருண்டாக கையில் தருவதை வாங்கி வாங்கி உண்டேன். பின்னாலில் அந்த சுவைக்காக அம்மை போட்டு தண்ணீர் விடும் வீடுகளில் (அம்மை போட்டவருக்கும் சிறு குழந்தைகளும் அந்த கொள்ளு குழம்புச் சாப்பாடு கொடுக்கப்படும்) அழைந்து திரிந்துருக்கிறேன். இப்போது தெரிகிறது நான் ஏன் கொள்ளு குழம்பை மிகவும் விரும்புகிறேன் என. சென்னையில் அது கிடைப்பதில்லை என்றாலும் நான் வீட்டிற்க்குப் போனால் என் அம்மா இன்னும் கொள்ளுக் குழம்பைத் தான் வைத்துதருவாள்.
குழந்தைகள் (முதல் ஒரு வருடம்) எல்லாவற்றையும் சுவை மூலமே அறிகிறார்கள். எதைப் பார்த்தாலும் வாயில் போட்டு சுவைக்கவே நினைக்கிறார்கள். அவர்களின் மற்ற புலன்கள் எல்லாம் முக குறைவாக செயல்படும் போல. எனது மருமகனை தூக்கி வைத்திருக்கும் போது இதை நான் உணர்ந்திருக்கிறேன். மனிதன் நாள் ஆக ஆக அந்த சுவை மறந்துவிடுகிறான். இந்த கதையில் வருவது போல குழந்தையானால்தான் அதை உணரமுடியும் போல அதற்க்கு எல்லாவற்றையும் இழக்க வேண்டும்...பர்ஸ், கிரிடிட் கார்ட், அடையாள அட்டை.
பொதுவாக நாம் எல்லாவற்றையும் இழக்க நாம் தயாராக இல்லை. யானை துரத்தி அவர்கள் தங்கள் அடையாளங்களை வம்புக்கட்டாயமாக இழக்கவைத்தால் ஒழிய. அப்போது சோறு மட்டுமே பிரதானம் ஆகிறது. மற்றதேல்லாம் மலையின் குன்றில் விழுந்து எங்கோ தொலைந்து போகிறது. போரும் அமைதியும் நாவலில் வரும் ஃபியர் போரில் சிறைபிடிக்கப்பட்டு வெகு தூரம் நடத்திவரப்படுகிறான். மாடமாளிகையில் சொகுசாக வாழந்தவனுக்கு இந்த நிலை மிக கஷ்டமாக இருக்கிறது. ஒரு இளவரசன் கைதியுடன் கைதியாக. அந்த நாளின் இறுதியில் அளிக்கப்படும் சோற்றில் அவன் அதுவரை இல்லாத நிறைவை அடைகிறான். மனிதனுக்கு என்ன வேண்டும்? சோறு..மற்றதேல்லாம் ஆடம்பரமே.....
"என் மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டிருந்தது. எனக்கு நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை. அழுதுவிடுவேன் என்று தோன்றியது."
வேறு என்ன தோன்றும் மனிதனுக்கு? தான் வாழ இதுதான் தேவை எனக் கண்ட மனிதனுக்கு...
Comments
Post a Comment