கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம்செப்பாது கண்டது மொழிமோ
காமம்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீ அறியும் பூவே
நறியதும் உளவோ நீ அறியும் பூவே
-இறையனார், குறுந்தொகை.
காதலன் அல்லது காதலி தரும்
பரிசுப் பொருட்கள் என்ன மதிப்பு என்று கணக்கிட முடியுமா? அவை பொருட்கள்தான், நிச்சயம்
சந்தையில் அதற்கு மதிப்பிருக்கும். ஆனால் அதே மதிப்பைக் காதலில் பொருத்திப் பார்த்தால்
வரும் சிக்கல்தான் இந்தக் கவிதையிலும் வரும் சிக்கல்.
இயற்கையிலேயே பெண்ணின்
கூந்தலுக்கு மணமுண்டா? என்ற கேள்வி மிகப் பிரபலமானது. நிச்சயமாக மணமில்லை என்பது உண்மை.
அது உலகின் நியதி. ஆனால் காதலுக்கு மட்டும் பொருந்தாது.
காதல் புரியும் காதலர்,
தாங்கள் வாழும் தனிப்பட்ட உலகிற்கு சென்றுவிடுவார்கள். அதே கடற்க்கரைதான், ஆனால் அது வேறு உலகம். எப்படி
குழந்தைகள் ஒரே டப்பியைச் சமையல் பாத்திரமென்றும், உடனே அதை வீடெனவும் மாற்றிக்கொள்ளும்
வேறுபட்ட உலகத்தில் இருக்கிறார்களோ அதே போலத்தான், காதலர்கள் உலகமும்.
காட்டை வாசனை மூலம் அறிந்து
தேனை மட்டும் ஊறிஞ்சி வாழும், அழகிய இறகுகள் கொண்ட தும்பியைக் கேட்கிறான். அவனுக்கும்
சற்று சந்தேகம்தான். அதனால்தான் உண்மையைச் சொல் என்கிறான். காதலனாய் ஆனதும் கூந்தலில்
மணம் வருவதும், சாதாரணமானவன் ஆனதும் மறைந்து போவதும், அவனுள் கேள்வியை எழுப்பி இருக்கிறது.
அதற்கு சரியானதென தும்பியிடம் கேட்டுள்ளான்.
ஜெயமோகன் சொல்வது போலக்
கவிதை நிகழ்காலத்தில் தான் நடக்கிறது. இது எழுதி இரண்டாயிரம் வருடமிருக்கும். ஆனால்
அது படிக்கும் கணத்தில்தான் நடக்கிறது. எனவே காதலனாய் படிக்கும் போது கவிதை திறந்துகொள்ளும்.
அறிஞர்கள் போல (நக்கீரனார்) படித்தால் நிச்சயம் பாட்டில் பிழை இருக்கும். கவிதை திறக்காது.
Comments
Post a Comment