முன்னால்
இருப்பவரின் நிழல் கவிந்து என் தலையை தொட்டது. நானும் அவரைப் போல தலையை மண்ணில் புதைத்து
பிட்டத்தைத் தூக்கி கிடந்தேன். பலத்த அமைதி நிலவியிருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில்,
வாசனையில்லாததாக இருந்தது மண். களிமண் போல பார்வைக்குத் தெரிந்தாலும், அது இல்லை. வாசனையற்று
இருந்தது. உருண்ட சிறிய மண் துகள்கள் உதடுகளைத் தொட்டும், கன்னங்களில் முத்தமிட்டும்
வெம்மையைத் தந்துகொண்டிருந்தது. இன்ன காரணமென்று தெரியாது, சரிந்து கிடக்கிறேன். முன்னால்
இருந்த சுவரில், இரு ஓரங்களில் சாளரங்கள் இருப்பதாய் தோன்றிற்று. அதன் உயரம் காரணமாக
அதனைப் பார்க்க இயலவில்லை. வெள்ளை நிற ஒளி
அதனூடே படர்ந்து அறையை நிறைத்துவிட்டிருந்தது. பக்கவாட்டு சுவர்களும் அதே போல் உயர்ந்து
கிடந்தது. கருப்புநிற தீற்றல்கள் ஆங்காங்கே அசிங்கமாய் அதன் மீது தெரிந்தது, எனக்குக்
குமட்டல்களை வரவழைத்தது. சுற்றும் பார்த்தேன். அனேக நபர்கள் என்னைப் போலவே தலையைப்
புதைத்து கிடந்தனர். இங்கு எப்படி வந்தேன்? இதற்கு முன் எங்கே இருந்தேன்?
நான் யார்? இவர்களுடன் என்ன பண்ணுகிறேன்? அடுத்து என்ன பண்ணவேண்டும்? யாரைக் கேட்கலாம்
என்ற கேள்விகளை மனம் அடுக்கிக் கொண்டே போனது. சற்று தலையை தூக்கிப் பார்த்த போது அறை
முழுக்க என்னப் போலவே நிறைய மனிதர்கள் இருப்பதைக் கண்டேன். சுவரை ஒட்டியிருந்த இடம்
தாழ்வாகவும், பின்னோக்கி வரவர உயர்ந்துகொண்டும் போனது. வியர்வைக் கண்களில் வழிந்து
எரிச்சலைக் கொடுத்தது. கண்களைக் கசக்கினேன்.
பின்னால பாருடா
திவாகர், அது நிக்கிது. நல்ல ஒழிஞ்சுக்க…கேய்ய்ய்ய்ய்ய் என யாரோ கத்தினார்கள்.
மனம் திகிலுற்றது.
புலன்கள் அனைத்தும் உயிர்தெழுந்தன. பார்வை கூர்மையானது. திரும்பிப் பார்க்க அச்சமாய்
இருந்தது.
சிவராமன்
நீயும்தான்டா…..சரியா ஒழியல….மண்ணுக்குள்ள போயிடு. உள்ள…ஆமா என மறுபடியும் அதே குரல்
ஒழித்தது. முன் இருந்தவரும் என்னைப் போலவே அச்சப்படுவது தெரிந்தது.
அப்போதுதான்
அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். நானும் எனக்கு முன்னால் இருப்பவனின் உடல் மட்டும் மண்ணுக்கு
மேலே கிடந்தது. மற்றவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் ஆனால் உடல் மண்ணுக்குள்ளே போய்விட்டிருந்தது.
கால்கள் உதற ஆரம்பித்தது. எதற்காக இந்தப் பயம் என நானே என்னைக் கேட்டுக்கொண்டேன். காரணமற்றது,
முட்டாள்தனமானது என என்ணிய அடுத்த நொடி மீண்டும் பயம் வந்து சூழ்ந்துகொண்டுவிட்டது.
சற்று வெட்கமாகவும் ஆனால் உயிரின் மீதான பயமோ அது என்ற சந்தேகத்துடனும், தலையைச் சற்று
திருப்பி பின்னால் என்ன இருக்கிறதெனப் பார்த்தேன். கொரில்லா குரங்குபோல உயரமாய் அறையின்
நுழைவாயிலை அடைத்துக்கொண்டு நின்றது. எதற்காகவோ காத்திருக்கிறது, ஆனால் எவ்வளவு நேரமெனத்
தெரியவில்லை. தப்பிப்பதற்கான கால அவகாசம் இதுதான் போலும் என எண்ணிக்கொண்டேன். அதன்
கால் மற்றும் கை நகங்கள் சிங்கத்தைப் போன்றே இருந்தது மனதை நிரந்தரமாக அச்சத்தின் பிடியில்
மாட்டிவிடுவதாக இருந்தது. சட்டென நினைவுகள் நதியேன பெருக்கெடுத்தன. இதைப் போலவே கிடப்பது
முதல் முறை இல்லை என்றும், பல முறை விளையாடிவிட்டிருப்பதாகவும் தோன்றிற்று. எப்படித்
தப்பித்து விளையாடினாலும் கடைசியில் இந்த மிருகத்தின் பிடியில் மாட்டி மடிவதும்தான்
நடந்திருப்பதாய் நினைவு. நினைவுகள் விலகி நிஜம் மூளைக்குள் குடிகொண்டதும், தப்பிப்பது
எப்படி என்று எண்ணத்தொடங்கினேன். முன்னால் இருந்தவர் எழுந்து ஓடி வலதுபுறத்தில் மண்ணைப்
பறித்தார், நானும் அவரைப் போலவே மண்ணைப் பறித்து உட்புகுந்தேன். முதுகு மட்டும் மண்ணிற்கு
வெளியே தெரிவதாய் தோன்றிற்று. அந்த நினைவே முதுகுத்தண்டில் சில்லிடலை ஏற்படுத்தியது.
நினைத்தது போல இது விளையாட்டா? இல்லை உண்மையா? இது விளையாட்டு என்றால் எது உண்மை? இது
உண்மை என்றால் நான் செத்துவிடுவது உறுதி. பிறகு எப்படி மறுபடியும் விளையாட இங்கே வருகிறேன்?
செத்த பிறகு நான் இல்லையே? வியர்வை ஓடையென உடலிலிருந்து ஓடி மண்ணை நனைத்துக்கொண்டிருந்தது.
அதன் ஈரம் ஒருவித பதைபதைப்பை உடலுக்குத் தந்தது. சிறுநீர் கழிக்கும்போது உடலில் ஏற்படும்
சிலிர்ப்பைப் போல உடல் சிலிர்த்தது.
மிருகத்தின்
கோர கர்ஜினை என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். அடிவயிற்றில் போய் அதன் கர்ஜினை முட்டி
நின்றது. குளிர்ஜுரம் கண்டவன் போல உடல் நடுங்க ஆரம்பித்திருந்தது. கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
இவ்வளவு பயங்கரமானதா உயிரின் மீதான ஆசை. அது மட்டும் இல்லை என்றால், அதன் கூர்மையான
முன் பற்களையும், சிவந்த எரியூட்டும் கண்களையும் சந்தித்துப் பேசியிருப்பேன். தப்பிக்க
வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இப்போது புத்திக்குள் ஓடியது. மற்றதைப் பற்றிய கவலை இல்லை
என்றே தோன்றிற்று.
திடுமென எழுந்து
வலதுபுற வாயில்வழியாக ஓடி, அறையைச் சுற்றிக்கொண்டு முன் சுவரின் இடத்திற்கு வந்தேன்.
பயம் மட்டுமே என்னை வழிநடத்துவதாய் தோன்றிற்று. அந்த இரண்டு சாளரங்கள் இருப்பது நன்றாகத்
தெரிந்தது. அதற்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் முட்டிக்கொண்டும் உள்ளே நடப்பதைப்
பார்த்துக்கொண்டும், தனக்கு இணக்கமானவர்களுக்காக கத்தியவாறும் இருந்தனர். சுவரைச் சுற்றி
ஓர் ஆள் அளவு சுற்றளவில், இடுப்பளவு மதில் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மதிலின் மேல்
மக்கள் திரள் கைகளை உயர்த்து சோக குரலில் வீரிட்டது. இவர்கள் பார்வையாளர்கள் போல் தெரிந்தாலும்,
அறைக்குள் நடக்கும் நிகழ்வில் ஏதோ ஒருவகையில் பங்கெடுத்தவர்களாய் தங்கள் உணர்ச்சியை
வெளிப்படுத்தினர். நான் முண்டிக்கொண்டு ஆர்வத்தின் காரணமாக உள்ளே நுழைந்தேன். எனது
உடல் மக்கள் திரளின் ஓர் அங்கமாக மாறிப்போனது. மிருகம் உள்ளே போகாமல் என்னைப் போலவே சுற்றிக்கொண்டு
வந்தால் என்ன செய்வது? தப்பிக்க வழியே இல்லையே என நினைத்துக்கொண்டிருக்கும் போது.
அப்படி நடப்பது
இல்லை. இப்போது அதன் வழியை அடைத்துவிட்டார்கள். இங்கு வராது எனச் சொல்லி தன் சிரிப்பை
வெளிப்படுத்தினான். அந்தக் குரல் சற்று முன் கேட்ட அதே குரல்தான் என எண்ணிக்கொண்டேன்.
அவன் தன்
கைகளை முன்னால் நீட்டி என்னைச் சுவருக்கு பக்கத்தில் இருந்த மதில் சுவருக்கு மேலே தூக்கிவிட
எத்தனித்தான். நான் நினைத்தது எப்படி இவனுக்குக் கேட்டது? நினைத்தேனா? சொன்னேனா? ஏன்
நினைவுகள் இப்படி அலைகின்றன? சந்தேகத்துடன் கைகளை நீட்டினேன்.
கர்….ஆஆஆஆ……கர்…ஆஆ,…………….என
கர்ஜனையும் , அலறலும் அறையின் உள்ளேயிருந்து கேட்டது. மனிதனின் உச்சக்கட்ட துக்கமான
சத்தமது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்களில்
நீர் வழிந்தோடியது.
கூட்டம் ஐய்யோ..
ஐய்யோ வென கத்தியது. ஈனமாகக் குரலில் சோகம் இழையோடியிருந்தது.
காப்பாத்துங்க…யாராவது..ஆஆஆஆ……..அம்மா….தாங்க
முடியலையே..வலி,வலி… கர்…..கர்….கர்…… மயான அமைதி நிலவியது. கூட்டம் சத்தமிடுவதை மறந்து
துக்கத்தில் ஆழ்ந்தது.
நான் அதற்குள்
சுவரின் மீது ஏறிவிட்டேன் ஆனால் அறை தெரியவில்லை. அதற்காக நகர்ந்து முன்னால் சென்றேன்.
முன் நிற்பவர்கள் துக்கத்தில் இருந்ததால் அவர்களுக்குள் நுழைந்து முன்னேறினேன். சாளரத்திற்கு
ஒரு அடிக்கு முன்னாலே போகவேண்டாமென நின்றுகொண்டனர். பச்சை நிற கம்பிகள் வைத்து , சற்று
அதிகமான இடைவெளி இருந்தது, என்றாலும் அதனுடே மிருகம் வெளியே வரமுடியாதது சற்று திருப்தி
அளித்தது. அடுத்த சாளரம் வழியே வந்துவிட்டால் என்ன பண்ணுவது? தலையைச் சாய்த்து அதனை
எட்டிப்பார்த்தேன். கொரில்லா மிருகத்தின் தலை அதில் தெரிந்தது. அமைதியாய் இருந்தது.
மக்கள் சற்று பயந்து பின்னால் ஓடினர். சிலைபோல அப்படியே கூட்டத்தைப் பார்த்து நின்றது.
வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன் அதன் பக்கத்தில்
நகர்ந்தான்.
அதுக்கு பக்கத்தில
போகாத..உனக்கு என்ன கிருக்கு பிடிச்சிறுக்கா என்ன? என கூட்டத்திலிருந்த ஒருவர். கூட்டத்தின்
கேள்வியை கேட்டார்.
அட! சாளரம்
எவ்வளவு சின்னதா இறுக்கு. அதனால் ஒண்ணும் பண்ண முடியாது என்று சொல்லிக்கொண்டு சுவரின்
மீது கைகளை ஊன்றினான். மிருகம் கைகளை சாளரத்தின் வழியே நீட்டி அவன் முகத்தைத் தடவியது.
பிறகு கை, கால்களைத் தடவியது. நீட்டியவாறே உள்ளே எடுத்துக்கொண்டது.
இப்போது கூட்டம்
முண்டியடித்துக்கொண்டு சாளரத்தின் அருகே வந்தது. நமக்கெல்லாம் சாவு இல்ல, உள்ள இருக்கிறாகளே,
அவங்களுக்குத்தா..ஆமா என்றவாறு தன் கையை நீட்டி அதன் மூக்கைத் தொட்டான். மற்றவர்களோடு
அளாவிக்கொண்டு அந்த சாளரத்தைக் கடந்துவந்தது.
சுவரின் மீது
கால்களை நன்றாகப் பதித்து கூட்டத்தைப் பின்னால் தள்ளினேன். அது கடிச்சி கொன்றுவிடும்,
பக்கத்தில் போகவேண்டாமென கத்தினேன். நான் கத்துவது யாருக்கும் கேட்டது போலத் தெரியவில்லை.
சிலர் முண்டிக்கொண்டு சாளரத்தின் முன்னால் நின்றனர். பின்னால் நின்றவர்கள் என்னைத்
தள்ளியவாறு கத்திக்கொண்டிருந்தனர். உடல் நடுங்க ஆரம்பித்தது. சாளரத்துக்குக் கீழே எனது
கால்களை ஊன்றித் தள்ள முற்பட்டது அற்ப காரியம். கூட்டத்திற்கு முன்னால் தனி நபரின்
பலம் கடுகளேவே. வலுக்கட்டாயமாகக் கூட்டம் என்னை அதனிடம் பிடித்துக்கொடுப்பதாய் தோன்றிற்று.
கால்களையும், கைகளும் தான் அதற்கு அருகாமையில் பிடிப்பதற்கு ஏதுவாய் இருந்தது. சாளரத்தின்
இடைவெளியில் அந்த கூர்மையானபற்க்கள் தெரிந்தது. உதடுகளைத் திறந்து மூடியது. கொடூரமான
கண்கள் விளக்கு போல எரிந்தது. எப்படியும் அது என்னைத் தின்றுவிடுமென மனதிற்கு தெரிந்தது.
தப்பித்துவிட வேண்டும், அப்படி நடக்காது எனவும் நினைத்தது. சாளரத்தில் நன்றாகத் தெரிந்தது
மிருகம். கைகளைச் சாளரத்தின் வழி நீட்டியது.
அதிர்ந்துபோய்
எழுந்தேன். இரவு விளக்கு சன்னமாக எரிந்துகொண்டிருந்தது. படுக்கை நனைந்து கிடந்தது.
இருதயம் வேகமாகத் துடித்தது.
Comments
Post a Comment