Skip to main content

நான் யார் – பகுதி 4


ஒற்றைக் கண் வானம், மேக உடுப்புக்களை உடுத்தி நாகரிகமடைந்து கொண்டிருந்தது. எனினும் சன்னல் வைத்த ஜாக்கெட்டின் வழி அழகான முதுகையும், வாழைத் தண்டைப் போல் வளுவளுப்பான இடையையும், மென்பாதங்களையும் இன்னும் வானம் காட்டிக்கொண்டுதானிருந்தது. மேகங்களை தொட்டுவிடும் உயரத்தில் ஏசு தன் இரு கரங்களையும் நீட்டிக்கொண்டு சர்ச்சின் உச்சியில் நின்றிருந்தார். ஒருமுறை பார்க்கும் போது வேதனையான முகமாய் தோன்றிற்று. கண்களை சிமிட்டி மறுமுறை பார்க்கும் போது கனிவும், அன்பும் நிறைந்த இன்முகத்தொடு வரவேற்ப்பதாய் எனக்குப் பட்டது. மரங்கள் சர்ச்சுக்கு பின்னால் பசுமை நிறத்தை நிறைத்திருந்தது. முன்னால் நின்று பார்த்தால் பச்சை நிற காய்க்குள் வெள்ளை நிற விதையைப் போல சர்ச் நின்றிருந்தது. கொக்கு கூட்டங்கள் மரங்களின் கிளையில் அமைதியின்றி உட்க்காந்திருந்தது. மெதுவாக முன்னால் இருந்த இரண்டு கொக்குகள் மட்டும் பறந்து, தன் இனத்தைச் சுற்றி வட்டமிட்டது. பின் எல்லாம் சேர்ந்து ஏசுபிரானை நோக்கிப் பறந்து வந்தது. துதிப் பாடல்களும், மணியோசையும் தொடர்ந்து காதில் விழுந்தது. எல்லோரும் இறஞ்சிக் கொண்டிருந்தனர்..

அந்த அழகான மாலை வேளையில் பார்க்கின் அழுக்கடைந்த பென்சின் மேல் அமர்ந்திருந்தேன். காலையிலிருந்த மனக்குழப்பம் இன்னும் தீர்ந்ததாய் தெரியவில்லை. துதிப்பாடல்கள் அழுத்தமான குரலால் பார்க் முழுவதும் பரவியிருந்தது.

பிச்சைக்காரர்கள் சர்ச்சின் வாசலில் வரிசையாக நீண்டிருந்தனர். அவரின் வரவேற்ப்பை ஏற்றார்களா என்று தெரியவில்லை. தினந்தோரும் சர்ச் வாசல் வரை வந்துவிட்டு, கடைசி வரை உள்ளே போகாமல் திரும்பிவிடுவர். எப்பொதும் போல சர்ச்சின் வாயிலில் கவலை தொய்ந்த முகத்துடன் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர். யாரும் உள்ளே போகவும் இல்லை வெளியே வரவும் இல்லை காற்றைத் தவிர. அது மட்டும் உள்ளே, வெளியே என்று விளையாடிக்கொண்டிருந்தது. மேயின் கேட் திறந்துகிடந்தது. புழுதி, காற்றின் உதவியால் வட்டமாய் மேலெழுந்து சுழன்று பிச்சைக்காரர்களை தழுவியது, பிறகு வாயிலை நோக்கி மெதுவாக நகர்ந்தது. சந்தனக் காடு சட்டென வாயிற்க் கதவின் முன் மந்திரமிட்டதாய் தரிசனம் தந்தது. சற்றேக் குறைய அந்த புழுதிதான் தன் வட்டத்திக்குளிருந்த இடைவெளி வழியாக இவ்வளவு அழகான சந்தனக் காட்டை கொணர்ந்திருக்க முடியுமென தோன்றியது. அந்த சந்தனக் காடு அழகான பெண்ணானது. கண் முன்னே நடக்கும் மந்திரத்தைப் பற்றி சிறிதும் கவனம் கொள்ளாமல், பிச்சைக்காரர்கள் இன்னும் உள்ளேயே பார்த்திருந்தனர். தேன்ஆர் பொன் மலர்கள் அவள் இதழ்கள், வேண்டியவற்றை எல்லாம் தன்னுள் இழுக்கும் கருவேர்கள் அவள் விழிகள், பறவைகளமரும் பெருங்கிளை அவள் குழல். மேகங்கள் காட்டில் சாய்ந்ததால் அவள் மேனி உருவாகிற்று. அவள் சந்தனக்காடு. கண்களில் பாத்திருக்கும் போதே கானல்நீராய் மறைந்து போனால். புழுதி, அவள் மறைந்த இடத்திலேயே சுற்றி வந்தது. கண்கள் அந்த புழுதி சுற்றுவதையே உற்றுநோக்கியது. சற்று நேரத்திற்க்கெல்லாம் என் மனதுக்குள் அந்த புழுதி சுற்றுவதையே உணர்ந்தேன்.

சீராய் வெட்டப்பட்ட புல்வெளி மீது தண்ணீர் பைப் மழையை பொழிந்து கொண்டிருந்தது. புற்கள் வெட்கமே இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் குளித்தது பிறகு தலையில் நீர்க்குல்லாவை அணிந்து கொண்டன. நடைபாதையின் இருபுறமும் பூமி தேவியின் தலைமுடியாய் சிறுசிறு செடிகள் வளர்ந்து நின்றது. அவள் மயிர்கள் பச்சை நிறமானவை. எப்பொழுதெல்லாம் வெழுத்துவிடுகிறதோ அப்பொதேல்லாம் மூப்படைகிறால் என்று அர்த்தம், சில மாதங்களில் திரும்பவும் இளைமையாகிறால். ஆனால் நான் பார்த்தவரை இங்கு மட்டும்தான் அவளை மூப்படையாமல் பார்த்துக்கொள்கிறார்கள் போல. அதனால்தான் இளமையோடும், அழகோடும் அவள் முடிகள் காட்சி தருகின்றன. மனம் சற்று நிதானமடைந்தது. என் பார்வை பார்க்குக்கு வெளியே நடந்து சென்றது. அட என்ன கொடுமை! வெளியே இருக்கும் மரங்களும், செடிகளும், புற்களும் இளமையிழந்து, அழகு குன்றி மூப்படைந்திருந்தது. பார்க்க பாவமாயிருந்தது.

எனக்கு அருகில் திடுமென ஏதோ ஒலி கேட்டு திரும்பினேன். கத்திரிக்கோல் கத்திக்கொண்டு புற்களையும், செடிகளையும் வெட்டிக்கொண்டிருந்தது. அனேகமாக கத்திரிக்கோல் எல்லா முடிகளையும் வெட்டிவிட்டிருந்தது. நிசப்தமாய் இருந்தது அந்த பார்க். பென்ஞ்சிலிருந்து எழுந்து கொண்டேன். நிசப்தம் என்பது நிசப்தமில்லை. வெட்டப்பட்ட செடிகளும், மரங்களும் கத்திய சன்னமான குரல் காதில் விழவில்லை. என்னால் கேட்க்க முடியவில்லை என்றால் அது நிசப்தம் என்று என்னை நான் ஏமாற்றிக்கொண்டேன்.

பார்க்கின் வாயிலில் நின்று உள்ளேயும், வெளியேயும் பார்த்தேன். பார்க் அழகானது, ஆனால் அடக்குமுறைக்குள்ளானது. அந்த மூப்படைந்த மரத்தின் மேல் ஒரு மரியாதை வந்தது.

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ