Saturday, August 11, 2018

தீராத விருந்து

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே

-      மிளைப்பெருங் கந்தனார், குறுந்தொகை 204

பற்கள் தேய்ந்துபோன கிழப்பசு புற்களை தின்பது சற்று கடினம். அதிலும் இளம்புல் என்பது சுவையானது, மணமானது. துளிர்விட்டிருக்கும் அதன் சிறு இலையை பற்க்காளால் கடிப்பது இயலாத காரியம். அதன் சிறு துளி மட்டும் அதன் வாயிற்கு சிக்கும். சுவையின் காரணமாக மறுபடியும் கடிக்கும். ஆனால் முழுதாக தின்ன முடியாது. விடமுடியாமலும், தின்ன முடியாமலும் தவிக்கும். அது ஒரு தீராத விருந்து.

காமம் காமம் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். சில வேளைகளில் அதனை நோய் என்றும் மோகினி என்றும் சொல்லிவிடுறார்கள். உண்மையில் அது தீராத விருந்து. மனிதனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைகளினால் முழுதாக அதனை அடையமுடியாது, ஆனால் அதன் சுவை காரணமாக விடமுடியாமல் தொடர்ந்து உண்ணும் விருந்து. தின்னத் தின்ன தீர்ந்து போகாது. எத்தனை யுகங்கள் கண்ட பழமையான ஒன்று, இன்னும் மனிதனால் அதன் மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாமல், தொடர்ந்து அவிழ்க்க முயலுகிறான் போலும். தலைமுறை தோறும் முயன்றுவருகிறார்கள். அது இயற்கையின் முடிச்சு, அவிழ்த்துவிட்டால் உலகின் அனைத்து மர்மங்களும் தெரிந்துவிடும். ஆனால் முடியுமென்று தெரியவில்லை. ஏனென்றால் அது தீராத விருந்து.   




தூங்காத விழிகள்

நள்ளென்ற றன்றே,யாமம்; சொல்அவிந்து

இனிதுஅடங் கினரே, மாக்கள்; முனிவுஇன்று;

நனந்தலை உலகமும் துஞ்சும்;

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.


-      பதுமனார், குறுந்தொகை 06

காதல் நெல்லிக்காயைப் போல தின்னும் போது துவர்க்கும் பின்பு இனிக்கும். தண்ணீர் குடித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். தின்னவும் முடியாமல், துப்பவும் முடியாத நிலை. காதல் கொண்ட நினைவுகள் எழும்போது சிறு துண்டு இனிப்பை விழுங்கியது மாதிரி தொண்டைக்குழிக்குள் இனிக்கும். சிறு நொடி இன்பம். சாரல்மலை பொழியும் போது சட்டெனச் சூரியன் வந்து சுட்டெரிக்கும். அந்த நினைவுகள் மறைந்த பிறகு துன்பம் துன்பம். இன்பத்திற்கு நிகர் துன்பம். இன்பமும் துன்பமும் மாறி மாறி, மாரி காலம், வெனிர் காலமாய் வருகிறது. ஒரே நேரத்தில் துன்பப்படலாம் அல்லது இன்பமுறலாம். ஒரு நொடி குளிர் மறுநொடி வெயில். எப்படித் தாங்கிக்கொள்வது. 


“கங்குள் வெள்ளம்” என மறுபாடலில் இருட்டை வெள்ளமென்கிறார்கள். இருள் ஆழமானது, மர்மமானது. நேரடியாக அடிமனதை திறந்துகாட்டிவிடும். எளிதாய் நெல்லிக்காய் கிட்டிவிடும். பிறகு தீராத அந்த இருளென்னும் நதி வெள்ளத்தில் நீந்த முடியாமல் மூச்சு திணறி விழி பிதுங்கும் வேளையில், யாமம் நள்ளென்ற சத்தமிடுகிறது. அது என்னைப் போன்ற அபலைகளின் கையறுநிலையிலான மனக்குமுறல்காளா? இருக்கும். என்னைச் சேர்ந்தவர்களின் பேச்சொலி அடங்கிவிட்டது. நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சியாய் தூங்குகிறார்கள். இந்த அகன்ற உலகமும் தூங்குகிறது. இதுவல்லவோ நான் அவரைச் சந்திக்க செல்லும் நேரம். ஆனால் அவர் அவர் வரவில்லை. அவருடன் காதல் கொண்ட நினைவிகள் மட்டும் எழுகிறது. அதனால் நான் மட்டும் தூங்காமல் விழித்திருக்கிறேன். தூங்கிவிடமுடியுமென நினைவிறீர்கள்?


Thursday, August 9, 2018

பிரிவின் வழி


நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
-        ----      காமஞ்சேர் குளத்தார், குறுந்தொகை 04


பிரிவின் வழி கொடுமையானது. அதை எப்படி தாங்கிக் கொள்வதென்பது நிச்சயம் பிடிபடாத ரகசியம். மனதினுள் அது அணுப்பொழுதும் ஊறி வழியும் போது, அதை நினையாமல் உதறியேறிவதன்பது நடக்காதக் காரியம். எந்தக் காதல்தான் அமைதற்கு அமையாத காதல்? வழிதாளாமல் அவள் உள்ளம் பிதற்றுகிறது. அவன் எனக்கானவன், எனக்கு மட்டுமே ஆனவன். அதே போல் நான் அவளுக்கு உரியவள். அப்படிப்பட்ட காதலர் பிரிந்துவிட்டாரென்பது தாளமுடியாத துயரம்.

இரவெல்லாம் தூங்காமல் தலைவனை எண்ணி எண்ணி, அழுது சிவந்த கண்களது. உள்ளத்தின் வெம்மை தாங்காமல் கண்ணீர் சூடாகி வழிகிறது, வெம்மையான கண்ணீரைமட்டும் தாங்கிக் காத்திருக்கிறாள். அது இமையைச் சூடுகிறது. நோயால் நெஞ்சு படும் பாடு சொன்னால் புரியாது. அதனால் பிதற்றுகிறாள். தலைவன் வருவானோ என்ற ஏக்கம் மனதில். நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!

தேன்கூடு

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

குறிஞ்சிப் பூ மலையின் உயரத்தில் மட்டும் பூப்பது. ஒன்பது முதல் பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை மட்டும் பூக்கும். பூத்தால் நிலம் தெரியாதளவு மலர்கள் விரிந்து கிடக்கும். தேனீகள் அதனைக் கொண்டு பெரிய கூடு கட்டும். மற்ற தேன்கூட்டில் எல்லா மலர்களின் தேனும் கலந்து இருக்கும் ஆனால் குறிஞ்சிப் பூ மலர்ந்தால், அதன் தேன் மட்டுமே கூடுகளில் இருக்கும். காரணம், தேன் மலிந்து கிடக்கும் அக்காலத்தில்.பெருந்தேன் இழைக்கும். 

தலைவனைச் சந்தித்த நினைவுகளை மட்டுமே கொண்டு அவள் கட்டிய தேன்கூடு. சந்திப்புக்கள் நிகழ்வது ஆபூர்வம். சந்தித்தால் அன்பு வழிந்தோடும், அதனை நினைவுகளாய் ஊறிஞ்சி, அவள் கட்டிய தேங்கூடு. அதில் அவன் நினைவுகள் மட்டும். அதன் ஒரு துளியை எடுத்து ருசித்துப் பார்த்தால், அது நிலத்தினும் பெரிது, வானினும் உயந்தது, நீரினும் ஆழமானது. 

Sunday, August 5, 2018

நறுமணம் உளவோ?


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீ அறியும் பூவே

-இறையனார், குறுந்தொகை.



காதலன் அல்லது காதலி தரும் பரிசுப் பொருட்கள் என்ன மதிப்பு என்று கணக்கிட முடியுமா? அவை பொருட்கள்தான், நிச்சயம் சந்தையில் அதற்கு மதிப்பிருக்கும். ஆனால் அதே மதிப்பைக் காதலில் பொருத்திப் பார்த்தால் வரும் சிக்கல்தான் இந்தக் கவிதையிலும் வரும் சிக்கல்.


இயற்கையிலேயே பெண்ணின் கூந்தலுக்கு மணமுண்டா? என்ற கேள்வி மிகப் பிரபலமானது. நிச்சயமாக மணமில்லை என்பது உண்மை. அது உலகின் நியதி. ஆனால் காதலுக்கு மட்டும் பொருந்தாது.


காதல் புரியும் காதலர், தாங்கள் வாழும் தனிப்பட்ட உலகிற்கு சென்றுவிடுவார்கள்.  அதே கடற்க்கரைதான், ஆனால் அது வேறு உலகம். எப்படி குழந்தைகள் ஒரே டப்பியைச் சமையல் பாத்திரமென்றும், உடனே அதை வீடெனவும் மாற்றிக்கொள்ளும் வேறுபட்ட உலகத்தில் இருக்கிறார்களோ அதே போலத்தான், காதலர்கள் உலகமும்.

காட்டை வாசனை மூலம் அறிந்து தேனை மட்டும் ஊறிஞ்சி வாழும், அழகிய இறகுகள் கொண்ட தும்பியைக் கேட்கிறான். அவனுக்கும் சற்று சந்தேகம்தான். அதனால்தான் உண்மையைச் சொல் என்கிறான். காதலனாய் ஆனதும் கூந்தலில் மணம் வருவதும், சாதாரணமானவன் ஆனதும் மறைந்து போவதும், அவனுள் கேள்வியை எழுப்பி இருக்கிறது. அதற்கு சரியானதென தும்பியிடம் கேட்டுள்ளான்.


ஜெயமோகன் சொல்வது போலக் கவிதை நிகழ்காலத்தில் தான் நடக்கிறது. இது எழுதி இரண்டாயிரம் வருடமிருக்கும். ஆனால் அது படிக்கும் கணத்தில்தான் நடக்கிறது. எனவே காதலனாய் படிக்கும் போது கவிதை திறந்துகொள்ளும். அறிஞர்கள் போல (நக்கீரனார்) படித்தால் நிச்சயம் பாட்டில் பிழை இருக்கும். கவிதை திறக்காது.  
  



பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...